articles

img

நவீன அடிமைகள் ஆர்.எஸ்.செண்பகம் மாநில துணைத் தலைவர், சிஐடியு

      கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பே அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்றும் அது “நவீன அடிமைத்தனம்” வடிவத்தில் தொடர்கிறது. கட்டாயப்படுத்தி  வாங்கும் உழைப்பு, மனித கடத்தல், கடன் வாங்கியவர்களை கொத்தடிமைகளாக்குவது, பரம்பரை பரம்பரையாக அடிமைகளாக வைத்திருப்பது, குழந்தைகளை கொத்தடிமைகளாக்கி அனைத்து வகையிலும் சுரண்டுவது, கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது, குழந்தைத் திருமணங்கள், குடும்பங்களில் வீட்டு அடிமைகளாக்குவது மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலியில் மறைந்துள்ள பல்வேறு முறைகளிலான அடிமைத்தனங்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வார்த்தை தான் “நவீன அடிமைத்தனம்” என்பது. இதற்கு பல்வேறு உதாரணங்களை காட்ட முடியும்.  குறிப்பாக, 71 சதமான  பெண்கள் நவீன அடிமைத்தனத்தில் உள்ளனர் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சமூக பொருளாதார ஆர்வலர்கள் ‘நவீன அடிமைத்தனம்’ முழுக்க முழுக்க பெண்மயம் ஆவது பற்றி அதிகம் பேசுகிறார்கள்.

 62:38

      இந்தியாவில் பல குடும்பங்களில் செங்கல் சூளைகளில் குழந்தைகள் வேலைக்குத் தள்ளப்பட்டு கொத்தடிமைகளாக்கப்படுகிறார்கள்.  கார்ப்பெட்டுகள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் நவீன கொத்தடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை நாம் காண முடியும். வறுமையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அடக்குமுறை வலையில் பல குடும்பங்கள் சிக்கியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். நவீன கொத்தடிமைத்தனத்தில் மனித உரிமைகள் படுகொலை செய்யப்படுகின்றன. இரண்டு முக்கிய அடிமை முறைமைகளான கட்டாய உழைப்பு மற்றும் கட்டாய திருமணம் என்ற பெயரிலான அடிமைத்தனத்தின் உலகளாவிய விகிதாச்சாரம் 62:38 ஆகும்.

     2023 ஏப்ரல் 21 டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளியானது. தில்லி குழந்தைகள் பாதுகாப்பு மையம், தில்லி அரசாங்கத்திற்கு இந்த அட்சய திருதியையின் போது சில குழந்தைத் திருமணங்கள் நடக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதாக கூறியது அச்செய்தி.  ஒரு இளம் பெண்ணுக்கு திருமணத்தை மறுப்பதற்கான உரிமை இல்லாதபோது, அந்தத் திருமணத்தை ‘அடிமை திருமணம்’ என்று கொள்ள வேண்டும். உலகளவில் இன்று இந்த அடிமை திருமண நடைமுறை அதிகரித்து வருகிறது. ஒரு இளம் பெண் பணத்திற்காக விற்கப்படுகிறாள். அவள் கணவன் இறக்கும் போது அதே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவரின் உடமைப் பொருளாக மரபுரிமையின் மூலம் ஆக்கப்படுகிறாள். பணக்கார வயதான ஆண்களை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளம் பெண்கள் பாலியல் மற்றும் வீட்டு அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள்.

பெண் உழைப்பாளிகள் கதி!

    பல நிறுவனங்கள் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துகின்றன. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணிச் சூழல், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, நிலையான ஊதியம், மருத்துவ சுகாதாரப் பலன்கள் போன்றவை வழங்கப்படுவதில்லை. முறைசாரா பொருளாதாரத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் எப்போதும் நிறைந்திருப்பதை ஆளும் வர்க்கம் உறுதிப்படுத்துகிறது. அவர்கள் முகவர்களால் அல்லது முகமைகளால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக்கப்படுகிறார்கள். இதனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடி மேற்பார்வையில் இருந்து அவர்கள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். இதுவே சுரண்டலுக்கும், பாதுகாப்பற்ற பணிச் சூழலுக்கும், முகமைகள் அதிக பண ஆதாயங்களை தேடவும்,  தொழிலாளர்களை நவீன அடிமைத்தனத்திற்கு தள்ளவும் வழிவகை செய்கிறது.

    இதில் பெண் உழைப்பாளிகளின் கதி மிகக் கொடூரமைனது. ‘நவீன அடிமைகள்’ உயிருள்ள சரக்காக - பண்டங்களாகக் கருதப்படுகிறார்கள்.  குறைந்த கூலியில் வேலை செய்யும் தொழிலாளிகள் – குறைந்த விலை சரக்காக அவர்களின் உழைப்பு சக்தி பார்க்கப்படுகிறது.   இன்றைக்கு விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அமைப்புசாரா துறையில் குறைந்த கூலிக்கு பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் முறையான கல்வி, முறையான பயிற்சி அல்லது திறனறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் நவீன கொத்தடிமைத்தனத்திற்கு மிக எளிதாக ஆளாக்கப்படுகிறார்கள். ‘புதிய அடிமைத்தனம்’ உலகப் பொருளாதாரத்துடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ஆளும் வர்க்கம்  நீண்ட கால முதலீடுகளாக பார்ப்பதில்லை.  உண்மையில், பழைய அடிமை முறைகளில் நீண்ட கால முதலீடுகளாக பார்க்கப்பட்டதால், அவர்களை பராமரிக்க வேண்டிய  அவசியம் இருந்தது. மாறாக, தற்போதைய நவீன கொத்தடிமைகள் மலிவானவர்களாக, சிறிய அளவில் மட்டும் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக, பயன்படுத்திவிட்டு சக்கையாக தூக்கியெறியப்படுவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

தொடர்புடைய மூன்று காரணிகள்  

      நவீன அடிமைத்தனத்தை உருவாக்குவதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று காரணிகள் உள்ளன. 1. கடந்த மூன்று தசாப்தங்களாக, அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக வறுமையில் உழலும், அவநம்பிக்கையான மக்களால் உலக தொழிலாளர் சந்தைகள் நிரம்பி வழிகின்றன. 2. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் விவசாயத்தை நவீனமயமாக்கி ஏழை விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றி, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் அடிமைப்படுத்தத் தயார் நிலையில் வைத்துள்ளது. 3. வளரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள விரைவான பொருளாதார மாற்றம் காரணமாக உருவாகியுள்ள நவீன அடிமைத்தனத்தின் சிக்கலான நிதி உறவுகள் ஊழலையும் வன்முறையையும் வளர்த்து, சமூக நெறிமுறைகளை அழித்துள்ளது.  பாலியல் வணிகத்திலிருந்து ஒரு குழந்தையை விடுவிப்பது அல்லது ஒரு கொத்தடிமையை ஒரு சுரங்கத்திலிருந்து விடுவிப்பது என்பது உண்மையில் அந்த குழந்தையை அல்லது கொத்தடிமையாக உள்ள தொழிலாளியை பட்டினியில் தள்ளும் என்பதால் அது ஒரு கசப்பான வெற்றியாகத் தான் மாறும் என்பது ஒரு கொடூரமான உண்மை. நவீன கொத்தடிமை கள் உருவாவதற்கான வளமான விளை நிலமாக வறுமை, பாலின சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று இடைவிடாது கொடுக்கக்கூடிய அழுத்தம் ஆகியவை இருக்கின்றன. இவ்வாறு நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள பெருவாரியான மக்கள், தாங்கள் சுரண்டப்படுவதை அறிந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.

     அவர்களுக்கு அவர்களது பிரச்சனைகள் “ஏன்” ஏற்படுகிறது என்பது தெரியாது. உண்மை ஊதியம் ஏன் குறைகிறது, அவர்களின் வாழ்வாதாரம் ஏன் சீர்குலைகிறது, அவர்களின் கண்ணியம் ஏன் கேள்விக்குறியாகிறது என்ற உண்மைகளைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். இந்த யதார்த்த நிலையை மாற்ற, நம்மைச் சுற்றியுள்ள அனைத்து தொழிலாளர்களையும் குறிப்பாக அனைத்துப் பெண் தொழிலாளர்களையும் அணுக வேண்டும். அவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமான அரசின் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது நமது முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.